Monday, April 20, 2009

இதற்காகவா பிறந்தோம்?



இப்படி வாழவா
எங்களைப் படைத்தாய் ??



இவற்றை எல்லாம்
பார்க்கவா எமக்கு கண்களைக்
கொடுத்தாய்??


எமது விதியில்
விடிவுகாலம் என்ற
அத்தியாயத்தை எழுத
மறந்து விட்டாயா??
இரக்கம் சிறிதும் இல்லாத
இறைவா!!!!!!!!!!!!!!!!!!!


Sunday, April 19, 2009

தமிழர்கள் பணயக் கைதிகளா பாதுகாப்பு வலயத்தில் ??

சர்வதேச சமூகத்தின் ஈழப்போர் சம்பந்தமான அறிக்கைகளில் விடுதலைப் புலிகள் அப்பாவித் தமிழர்களை மனிதக்கேடயங்களாக பயன்படுத்துகின்றனர் என்ற கருத்தை நாசூக்கான முறையில் பெரும்பாலும் அனைத்து அறிக்கைகளிலும் சமர்ப்பிக்கத் தவறவில்லை. வீட்டில் சிறு பிள்ளைகள் சண்டை பிடிக்கும்போது பெரியவர்கள் யார் மேல் பிழை இருந்தாலும் இருவரையும் கண்டிப்பது போன்றது அவர்களினது செயற்பாடு. உண்மையைத் தெரிந்து கொண்டும் அரசியல் நோக்கங்கள் கருதி அவ்வாறு தெரிவிப்பது எழுதப்படாத விதி.

ஆனால் சிலசில ஒரு பக்கச்சார்பான ஊடகங்களின் கதையைக் கேட்டுவிட்டு சில தமிழர்களும், பல தமிழ் பேசும் மக்களும் கதைப்பது வருத்தத்திற்குரியது. சிங்களவர் கதைப்பது அவர்களின் அறியாமை. எமது மக்கள் யதார்த்தத்தை புரியாதது வேதனைக்குரியது. சற்று சிந்தியுங்கள். இற்றைக்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் வலுக்கட்டாயத்தின் பேரில் குடியமர்த்தப்பட்டவர்களா? அவ்வாறு குடியமர்த்தப்பட்டோர் எனின் ஏன் அன்றே அவர்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வரவில்லை?? எவ்வாறு வரமுடியும் என சந்தேகத்திற்குரியவர்கள் கேட்கலாம். மிகவும் குறுகிய கட்டுப்பாட்டு எல்லைகளைக் கொண்ட பிரதேசத்தில் இருந்தே மக்கள் வெளியேறுகின்றனர் எனின், ஏன் அன்றே அவர்கள் வெளியேறவில்லை??

எல்லைகளைக் கடக்கும் மக்களை, புலிகள் தமது படைகள் மூலம் தடுத்து வைத்திருக்கிர்ரார்கள் என்று கூறித்திரிவோரே சற்று யோசியுங்கள். புலிகள் செறிவாக உள்ள பிரதேசத்திலிருந்தே மக்கள் வெளியேறி வருகிறார்கள் ஏன் பாரிய கட்டுப்பாட்டு பிரதேசம் புலிகளிடம் இருந்தபோது ஐதாக அவர்களின் படையணிகள் நிலை கொண்டிருந்த காலத்தில் இலகுவாக வெளியேறி இருக்கலாமே??

மக்கள் இன்று வெளியேறுவது ஏன் எனில் விடுதலை புலிகளிடம் இராணுவ ரீதியாக மோதுவதாக கூறிக்கொண்டு அரசாங்கம் அப்பாவித் தமிழர்களை கொல்வதன் மூலம் திட்டமிட்ட தமிழின அழிப்பைச செய்வதால் எஞ்சியுள்ள தங்களின் ஓரிரு சொந்தங்களையும் காப்பாற்றிக் கொள்ளவே ஒழிய விடுதலைப் புலிகளை வெறுத்து அல்ல.

இவற்றினை உணராது நாக்கில் நரம்பில்லாதது போல் எம்மக்கள் பேசுவது இவனெல்லாம் தமிழனா என எண்ணத்தோன்றுகிறது. இலங்கை அரசாங்கம் தமிழின ஒழிப்பை திட்டமிட்டு நடாத்திக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை உணருங்கள்.

தமிழீழ விடுதலை இயக்கம் என்பது வேற்று இனம் என்பது போல் அரச ஊடகங்களின் கருத்து தவறானது என்று உங்களுக்கு தெரியாதா?? விடுதலை இயக்கம் மக்களுக்காக மக்களால் உருவாக்கப்ப் பட்ட இயக்கம் என்பதை மனதில் கொண்டு வார்த்தைகளை வெளிவிடுங்கள்.

விடுதலைப் போராட்டத்தை வாழ்த்த வேண்டாம் வையாமலாவது இருங்கள் மாற்றுக்கருத்துடையோரே!!!!


Sunday, April 5, 2009

இறைவா நீ இருக்கிறாயா?

தர்மத்தின் பக்கம் கடவுள் இருப்பார் என்பது
சகல மதங்களினதும் கோட்பாடு.
அறத்தின் வழி நிற்போருக்கு சோதனைகள் இருக்கும்
கைவிடப் பட மாட்டார்கள் என்பது
ஒவ்வொரு சமயத்திலும் உள்ள வரலாற்று கதைகளின்
பிரதான உட்பொருள்.
ஈழத்தமிழர்கள் வாழ்வில் இவை யாவும்
பொய்யாகிப் போயின.
சோதனைக் காலம் என்பதற்கு வரையறை இல்லையா?
ஒரு தலைமுறை வாழ்க்கைக் காலம் சோதனை என்றால்,
நிம்மதியை அனுபவிப்பது எப்போது?
மதத்தால் வேறுபடாமல்
மொழி, கலாச்சாரத்தால் ஒன்றுபட்டு
எம்மக்கள் போராடுவது
கடவுளே உனக்கு பிடிக்கவில்லையா?
இறைவனின் பெயரால் நாம் போராடவில்லை என
எம்மீது ஆத்திரமா?
சந்தேகம் வந்துவிட்டது பல ஆத்திகர்களுக்கு
இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா என்று ...................