Monday, March 23, 2009

தமிழீழம் உருவாகுவதை ஏன் சர்வதேசம் விரும்பவில்லை......??

இன்று வன்னியிலே தமிழ் மக்கள் அரச பயங்கரவாதத்தால் அடிப்படை வாழ்வாதாரங்களை இழந்து, சொந்தங்களைத் தொலைத்து விட்டு உயிரைக் கையில் பிடித்தபடி பதுங்கு குழிகளில் அன்றாட சீவியத்தை ஓட்டுகின்றனர். அனைத்தும் அறிந்த சர்வதேச சமூகமோ பாரா முகமாய் அறிக்கைகளை மாத்திரம் விட்டபடி. அரசாங்கத்தின் இவ்வாறான மனிதாபிமானமற்ற செயல்களைக் கண்டிக்கின்றோம் என அறிக்கையை ஆரம்பிப்பது அத்தோடு விடுதலைப் புலிகள் அப்பாவி மக்களை மனிதக் கேடயங்களாகப் பாவிப்பதை எதிர்க்கின்றோம் என அறிக்கையை நிறைவு செய்வது சர்வதேச சமூகத்தின் வழக்கமாகிப் போனது கடந்த சில மாதங்களாக.

ஏன் இந்த நிலைப்பாடு...? ஏன் உலக நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் தமிழ் மக்கள் மீது எள்ளளவேனும் அக்கறை காட்டாது நடந்து கொள்கின்றன..???

இலங்கை அரசாங்கத்துக்கு துணை போவதால் ஏதாவது நன்மையை சர்வதேச சமூகம் பெற்றுக்கொள்ளுமா ....???

என்ற கேள்விகள் இன்று எம்மைத் துளைத்த வண்ணம் உள்ளன. ஏன் இந்த நிலைப்பாடு என ஆராயுமிடத்து..............

இலங்கையில் நடப்பது உள் நாட்டு யுத்தம் என்றாலும் பல நாடுகளின் சுய இலாபத்துக்காக நடத்தப்படுகின்ற பனிப்போராக இன்று வியாபித்து நிற்கின்றது.தெற்காசியாவில் உள்ள பலமான இரு நாடுகளும்(இந்தியா,பாகிஸ்தான்) சம்பந்தப் படுகின்றன. சீனாவின் கொள்கைகளை முன்னோடியாக கொண்டு செயற்பட்டு வரும் மகிந்தவின் அரசாங்கம் பல உடன்படிக்கைகளை செய்து அந் நாட்டிடமிருந்து உதவிகளைப் பெற்று வருகின்றது. இந்தியாவை கண்காணிக்க ஒரு தளமாக இலங்கையை பாவிக்கலாம் என்ற நப்பாசையில் பாகிஸ்தான் உதவிகளை வழங்குகிறது. எமது அயல் நாட்டில் அந்நிய சக்திகள் நுளைவது தமது பாதுகாப்புக்கு குந்தகம் என கருதி மற்றைய நாடுகளை விட அதிகமாக உதவிகளை வழங்குகிறது. ஒரு படி மேலே போய் இராணுவ ஆளணி உதவிகளையும் வழங்குகிறது. இந்தியாவோடு பல ஒப்பந்தங்களை கொண்ட அமெரிக்கா நேரடியாக தலையிடாது தலையிடுவதுபோல் கண்டன அறிக்கைகளை வெளிவிட்டு தன்னை நல்ல பிள்ளையாக வெளிக்காட்டிக் கொள்ள எத்தனிக்கின்றது.

அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை விடயம் குறித்து ஆராயப் படுவதை பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளில் 8 நாடுகள் ஆதரித்தன.7 நாடுகள் எதிர்த்தன. அமெரிக்கா,மெக்சிக்கோ ஆகிய நாடுகள் ஆதரித்திருந்தன. தீவிரவாததிற்கு எதிரான போர் என அமெரிக்கா தனது பொருளாதாரத்தை சிதைத்த காலத்துக்குள் சீனா தன்னை வெகுவாக முன்னேற்றி அமெரிக்கா இலங்கை விடயத்தில் தலையிட்டாலும் எதிராக நிற்க துணிந்து நிற்கிறது. அதாவது ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்கா சர்வதேச சமூகத்தின் குரல் என்ற போர்வையில் தலையிட சீனா சிறிதளவேனும் விரும்பவில்லை. அமெரிக்கா ஆதரிக்கின்றது என்பதற்காக ரஷ்யா எதிர்த்திருந்தது. இது வழமையான அமெரிக்கா-ரஷ்யா போட்டி. ஆயுதப்போராட்டத்தால் உரிமையைப் பெற்றுக் கொண்ட வியட்நாம் கூட அமெரிக்காவின் ஆதரவு நிலைப்பாட்டால் எதிர்ப்புக்கொள்கையை கடைப்பிடிக்கின்றது. அனைத்து நாடுகளும் தமது சுய இலாபத்தை அடிப்படையாகக் கொண்டே செயல் படுகின்றன.ஒரு பாரிய பனிப் போரே நடக்கின்றது இலங்கையை மையமாகக் கொண்டு. சர்வதேச சமூகத்தின் நோக்கம் சுயலாபமே என்றால் ஏன் அவை தமிழீழத்தை அங்கீகரித்து அதன் மூலம் தமது தேவைகளை நிறைவேற்றக் கூடாது என்ற கேள்வி பலருக்கு எழலாம்.அவ்விடயம் குறித்து நோக்கும்போது...............

எமது வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சிங்களப் பேரினவாதத்தின் அட்டூழியங்களினாலும் அடக்குமுறைகளினாலும் சொல்லணாத்துயரங்களை அனுபவித்து எத்தனை முறை விழுந்தாலும் அத்தனை முறையும் எழுந்து நிற்கின்ற ஒரு மனவலிமை மிக்க இனம். இம் மக்களின் பிரதிநிதிகளான விடுதலைப்புலிகள் தலைவன் ஒருவனின் கீழ் குன்றாத சகல வலிமைகளையும் கொண்ட ஒரு மக்கள் போராட்ட இயக்கம். இராணுவ ரீதியிலும் சரி தொழில்நுட்ப ரீதியிலும் சரி இதர எந்த துறைகளிலும் இலங்கை அரசாங்கத்தைவிட எத்தனையோ படி உயர்ந்து நிற்கின்றார்கள். தமிழீழத்தை சர்வதேச சமூகம் ஆதரிப்பதால் எட்டப் படும் தன்னாட்சியில் தமிழீழத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு மாபெரும் வளர்ச்சியாக இருக்கும். அரசாங்கத்தின் இன அழிப்பால் தமிழ் மக்களுக்கு தமிழீழம் மீதான பற்று அளவுக்கதிகமாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

அந்நிய நாட்டைச் சார்ந்திராத பொருளாதாரக் கொள்கைகள்,மக்களின் பரிபூரண ஆதரவு என மிகவும் குறுகிய காலத்தில் வளர்ச்சியடைந்து ஒரு வணங்கா மண்ணாக விரைவில் தோற்றம் பெற்று தெற்காசியாவில் ஒரு பிராந்திய வல்லரசாக மாறிவிடும் என இலங்கை அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்கும் இந்தியா முதல் சீனா வரை அறியும். யுத்த காலத்திலேயே எம்மவர்களின் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றியும் நாட்டின் ஒவ்வொரு விடயத்தையும் திறமையாக பயன்படுத்தும் அறிவுத்திறன் பற்றியும் தமிழ் மக்கள் அறிவார்கள்.

இவ்வாறான ஒரு தமிழீழத்தை அங்கீகரித்தால் அந்த மண் இலங்கையைப் போல் தமது தாளத்துக்கு தலையாட்டாது என சம்மந்தப்படுகின்ற சர்வதேச சமூகம் அறியும். இதுவே சர்வதேசத்தில் பெரும்பான்மையான நாடுகள் தமிழீழத்தை அங்கீகரிக்காமைக்குரிய காரணமாகும்.

"நாங்கள் இந்த உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கின்ற ஒரு சாதாரண சிறிய மக்கள் குழு அல்ல; நாங்கள் இந்த உலகின் மிகப் பழமையான - உயர் பண்புகளை உடைய - சுயமரியாதை மிக்க - ஒன்பது கோடி உயிர்களைக் கொண்ட - ஒரு மிகப் பெரிய தேசிய மக்கள் இனம்." என வழுதி அவர்கள் கூறியதை மனதில் வைத்து மக்கள் போராட்டங்களை புலம் பெயர் தேசங்களிலே சளைக்காது முன்னெடுத்துச் செல்லும்போது சுயநல போக்கான வெளிநாடுகளின் முகத்திரை கிழிக்கப்பட்டு தமிழீழக் கனி விரைவில் பறிக்கப்படலாம்!